உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இலங்கைக்கு வருகை தந்துள்ள, ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹூசைன் அமீர் – அப்துல்லாஹியன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
நேற்று, ஜனாதிபதி அலுவலகத்தில், இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது, ஹாஸா எல்லைப் பகுதிகளில், போர் நிறுத்தத்தை அமுல்படுத்தி, சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை, ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அந்த சமாதான ஒப்பந்தம், ஒருதலைபட்சமாக இருக்க கூடாது எனவும், இரு தரப்பும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேல் அரசாங்கத்தின் பாதுகாகப்பை உறுதிப்படுத்தி, ஐந்து வருடங்களுக்குள், பாலஸ்தீன அரசாங்கத்தை அமைக்க வேண்டியது அவசியம் எனவும், இந்து சமுத்திரத்திற்குள், பெர்சிய வளைகுடா நாடுகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வலயத்தின் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு, இலங்கை அர்ப்பணிக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான, கலாசார தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஈரான் வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, ஈரான் அர்பணிப்புடன் செயற்படும் என உறுதியளித்தார்.
அத்துடன், ஈரான் – இலங்கை பொருளாதார ஒத்துழைப்புகளின் புதிய அத்தியாயத்தை திறக்கும் வகையிலான செயற்பாடுகளை, இலங்கை முன்னெடுத்து வருவதாகவும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் சர்வதேச அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் பணிப்பாளர் தினுக் கொலம்பகே உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.