மீனவர் பிரச்னை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே பேச வேண்டுமென்று தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். இரண்டு நாடுகள் தொடர்பான விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கத்துடன்தான் பேச வேண்டும். அது சரியான கருத்துத்தான் ஆனால், இந்திய மத்திய அரசாங்கத்தை நெருங்குவதற்கான ஒரு கதவாக தமிழ்நாடே வரலாற்றுரீதியாக இருந் திருக்கின்றது. இந்த நிலையில், ஈழத் தமிழர்கள் என்னும் அடிப்படையில் தமிழ்நாட்டை புறந்தள்ளியும் செயல்பட முடியாது.
ஆனால், இங்கு பிரச்னையோ வேறு. வடக்கு மீனவர்கள் தொடர்ந்தும் இந்திய மீனவர்கள்மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதேவேளை, தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படைமீது குற்றஞ்சாட்டி வருகின்றனர். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், இந்திய தேர்தல் பிரசாரங்களில் கச்சதீவு விவகாரம் ஒரு பேசுபொருளாகியிருக்கின்றது.
அது ஒரு தேர்தல் கோஷமாகவே அடங்கிவிடும். ஏனெனில், கச்சதீவை மீளவும் இந்தியா வின் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்னும் கோரிக்கை தமிழ் நாட்டு அரசாங்கங்களால் காலத்துக்குக் காலம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தேர்தல் பிரசாரங்களில் அது ஒரு பிரதான பேசுபொருளாகியிருக்கின்றது. இது தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கில், இந்திய மத்திய அரசின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், கச்சதீவு இரண்டு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உடன்பாட்டின் அடிப்படையில் கையளிக்கப்பட்ட விடயமாகும். அதனை மீளவும் பெற வேண்டுமாயின், யுத்தம்தான் செய்ய வேண்டுமென்று கூறியிருந்ததை இந்திய ஊடகங்கள் செய்தியிட்டிருந்தன.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால் கச்சதீவு விவகாரம் தேர்தலுக்கு பின்னர் எவ்வாறான அதிர் வலைகளை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாகும். கச்சதீவு விவகாரத்துக்கு அப்பால், தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் வடபுல மீனவர்களுக்குமான முறுகல் நிலை தொடரத்தான் போகின்றது – இந்த நிலையில், இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேசி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டியது கட்டாயமானதுதான் – ஆனால், அதனை யார் முன்னெடுப்பது? அதற்கான தகுதிநிலையுடன் எந்தவொரு தமிழ்த் தேசியக் கட்சியாவது இருக்கின்றதா? முதலில் இந்தக் கேள்விக்கான பதில் தொடர்பில் சுமந்திரன் போன்ற வர்கள் சிந்திக்க வேண்டும்.
ஏனெனில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா. சம்பந்தன் உதாசீனம் செய்திருந்தார். அதற்கு சம்பந்தன் கூறியிருந்த காரணம் இந்திய பிரதமரை அவமதிப்பதாக அமைந்திருந்தது.
இதனை அப்போது பலரும் சரியாக புரிந்து கொண்டிருக்கவில்லை. உண்மையில் அது ஓர் அவமானப்படுத்தல்தான். ஏனெனில், பிரதமர் மோடியின் அழைப்புக்கு சம்பந்தன் கூறியிருந்த காரணம் ஒரு படிப்பறி வில்லாதவர்கூட கூறுவதற்கு யோசிக்கும் பதிலாகும். அதவாது, மாவை சேனாதிராசாவின் (தமிழ் அரசு கட்சியின் தலைவர்) மகனுக்கு திரு மணம். அதனால் பிறிதொரு திகதியை தருமாறு சம்பந்தன் இந்தியத் தூ தரகத்துக்கு தெரியப்படுத்தியிருந்தார். ஓர் இனத்தின் தலைவருக்கு இந்திய தேசத்தின் தலைவர் அழைப்பு விடுக்கின்றார் – ஆனால், அந்தத் தலைவரோ திருமணத்துக்கு செல்வது தொடர்பில் பேசியிருக்கின்றார் என்றால் தமிழ் தலைவர்களின் புத்திக்கூர்மையை எவ்வாறு நோக்கப்பட்டிருக்கும்?
ஒருபுறம், சம்பந்தனின் பதில் சிரிப்புக்கிடமானதாக இருந்தாலும்கூட மறுபுறம் சம்பந்தன் இந்தியாவை எவ்வாறு அணுகியிருக்கின்றார் என்று நோக்கினால் சம்பந்தனின் செயல் இந்தியாவை ஆத்திரமூட்டக்கூடியது. இது சம்பந்தனின் ஒரு வரலாற்றுத் தவறு. இவ்வாறான தவறைப் புரிந்திருக்கும் கட்சியின் அங்கத்தவரான சுமந்திரன் எவ்வாறு இந்திய மத்திய அரசுடன் மீனவர் பிரச்னை தொடர்பில் பேசப்போகின்றார்?